கோவை : தமிழகத்தில் இனி பாஜகவுக்குப் பின்னடைவு என்பதே கிடையாது என பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவராகப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாகக் கோவை வந்த வானதி ஸ்ரீனிவாசனுக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பேசினார். அவர் கூறியதாவது :- பா.ஜ.க மகளிரணி தலைவர் பதவி என்ற மிக முக்கியமான கௌரவத்தைத் தமிழகத்திற்கு வழங்கியிருக்கின்றனர். தென்னிந்தியாவில் இருந்து முதல்முறையாகத் தமிழகத்திற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசின் திட்டங்களைப் பெண்கள் வழியாகக் கொண்டு செல்வது எங்கள் பிரதான பணியாக இருக்கும். அனைத்து நிலையிலும் பெண்களுக்கு உதவும், முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக இந்த அரசு இருக்கின்றது.
நாடு முழுவதும் பெண்களுக்குப் பாதுகாவலராகப் பிரதமர் இருக்கின்றார் என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக வெற்றிவேல் யாத்திரையை மாநில தலைவர் முருகன் நடத்திக்கொண்டு இருக்கின்றார். கட்சியைப் பலப்படுத்த மட்டுமல்ல, தமிழகத்தின் சிறப்பையும் நாடு முழுவதும் எடுத்துச் செல்ல இதைப் பயன்படுத்துவேன்.
தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியை ஏற்படுத்துவதையே மாற்றமாகப் பார்க்கின்றோம். தற்போது தேசிய ஐனநாயக கூட்டணியில் இருக்கின்றோம். கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணியின் தலைமையாக அதிமுக இருக்கின்றது. ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும்.
பா.ஜ.க யாரைப் பார்த்தும் பயப்படவில்லை. சட்டப்படி நடைபெறும் யாத்திரையைத் தடுத்தால் மக்களிடையே எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனதான் சொல்கிறோம். ஆனால், அதிமுகவினர் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பெண்களின் கதாநாயகராகப் பிரதமர் மோடி இருக்கின்றார். கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து கட்சித் தலைமை முறைப்படி அறிவிக்கும். வெற்றிவேல் யாத்திரை ஒரு அடையாள யாத்திரை. இந்துக்களை கொச்சைப்படுத்துபவர்களை அம்பலப்படுத்தவே இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. விற்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது. முன்னேற்றம் மட்டும்தான், எனக் கூறினார்.