கோவை மாநகராட்சி எல்லையில் இரண்டு பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
கோவை மாநகராட்சி எல்லையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டு நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
எனவே மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது முகக் கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் வீட்டினை சுத்தமாகவும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. காய்ச்சல், இருமல்,தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மழைக்காலம் என்பதால் கோயம்புத்தூர் மாநகராட்சியில் தினந்தோறும் 64 சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கேட்டுக்கொண்டுள்ளார்.